Description
ஏறக்குறைய 1976-77க்குப் பிறகு தான் ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பற்றி நம் நாட்டில் மிகுதியாக நூல்கள் வெளிவரத் தொடங்கின. அதற்குத் தலைமையான காரணம் எழுபதுகளின் பிற்பகுதியில் நம் நாட்டில் ஆய்வியல் நிறைஞர் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் என்றால் தவறாகாது. அந்தக் காலகட்டத்துக்கு முன்பு முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்களுக்கு அவர்களுடைய ஆசிரியப் பெருமக்களே ஆய்வு நெறிமுறைகளை அவ்வப்போது கற்பித்து உணர்த்தியிருக்கிறார்கள். ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பற்றி நூல்கள் தேவை என்ற எண்ணம் அப்போது இயல்பாகவே எழவில்லை.
ஆய்வியல் நிறைஞர் படிப்பில் ஆராய்ச்சி நெறிமுறைகள் தேர்வுக்குரிய ஒரு தாளாக அமைக்கப்பட்ட பிறகு இந்தப்பாடத்துக்குரிய நூல்கள் தேவைப்பட்டன, மேலைநாட்டு ஆய்வுமுறைகளை விளக்குகின்ற மேலை நாட்டு நூல்கள் தொடக்கத்தில் பெரிதும் பயன்பட்டன. புதிதாக எழுந்த தேவையை நிறைவு செய்யும் வகையில் தமிழிலும் ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பற்றிய நூல்கள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கின.
ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் முறையை விளக்கி 1975ஆம் ஆண்டிலேயே டாக்டர் பொற்கோ அவர்களும் திரு அ. மெய்யப்பன் அவர்களும் புலமை நடை என்ற தலைப்பில் ஆய்வாளர்களுக்குப்
பயன்படும் வகையில் கையேடு ஒன்றை உருவாக்கினார்கள்.
ஆராய்ச்சி என்பது முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுப் பரவலாக்கப்படும்போது சில குறைகளுக்கும் இடமேற்படுவது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். அப்படிப்பட்ட குறைகளைக் களையத் தொடர்ந்து நாம் முயன்றாக வேண்டும் . அப்படிப்பட்ட முயற்சியின் ஒரு விளைவுதான் இந்த நூல்.






Reviews
There are no reviews yet.